Share

May 19, 2020

எஸ். வி. ரங்காராவ் - Scene Stealer

Scene Stealer


அகில இந்திய அளவிலும் இன்று வரை முதிய கதாபாத்திரங்களில் ஷோபித்தவர் யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் ரங்காராவ் என்பதாகத்தான் இருக்க முடியும்.

முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம் இவருக்கு தான்.
நீண்ட நெடிய காலம் முதியவராக நடித்த ஒரு நடிகர் தன் வாழ் நாளில் அறுபது வயதைப் பார்த்ததேயில்லை என்பது தான் அவருடைய வாழ்வின் அபத்தம்.

 மறைந்த போது  வயது ஐம்பத்தாறு.
அவர் பிறந்த வருடம் 1919 என்பீர்கள் என்றால் ஐம்பத்தைந்து.
1974ம் வருடம் ஜூலை 18ம் தேதி ரங்காராவ் இறந்தார்.

அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா,
எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.

இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.

 பாலையாவுக்கு 58 வயது.
சுப்பையாவுக்கு 57 வயது.

வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில்
இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும்
முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள்.
52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.

உயர்ந்து வளர்ந்த ரங்காராவின் தேக அமைப்பு, அந்த அழகான வழுக்கை தலை, அந்த விஷேச மூக்கு இவையெல்லாம் ரங்காராவுக்கு இயல்பிலேயே ஒரு தனித்தன்மையை அளித்திருந்தது.

நடிப்பு என்பதே மிகை சார்ந்த விஷயம் என்றிருந்த ஒரு காலத்தில் மிக இயல்பாக நடிக்க இவரை எப்படி அனுமதித்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

சீர் மிக வாழ்வது என்று ஒரு வார்த்தை போல சீர் மிக நடிப்பு நிகழ்த்தி காட்டியவர்.

ஒரு தெலுங்கு நடிகர் தமிழிலும் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்னொருவர் தெலுங்கு நடிகை சாவித்திரி.

கமல் ஹாசன் சொன்னார் ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’

தெலுங்கு,தமிழ் படங்களில் நடித்தவர்.
தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள்.
அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர்.
எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor.

’ரங்காராவ் ஷேக்ஸ்பியரியன் ஆக்டர்’ என்பதை அடையார் ஃப்ல்ம் இன்ஸ்டிடியூட்டில் ’லீனா, ரீனா, மீனா’ ஷூட்டிங்கின் போது,
வி.எஸ்.ராகவன் கண்ணை விரித்து அழுத்தமாக என்னிடம் தெரிவித்தார். டி.வி பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறார்.

நாடகங்களில் நடித்திருந்தாலும்,
திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும்
 நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய
சாதனை செய்தார்.

தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான்
Scene Stealer. ஏனையநடிகர்கள் யாராயிருந்தாலும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.


‘கற்பகம்’ படத்தில் ஜெமினியின் நடிப்பை சிலாகித்து ரங்காராவ், “தம்புடு, you know I am a scene stealer. ஆனால் கற்பகத்தில் you have excelled me “ என்றாராம்.

நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான
நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை.
ரங்காராவ் ரொம்ப தாமதமாக
உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்
 " கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு.
ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்."

ரங்கா ராவ் ரொம்ப  மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு  விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ்
காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .
எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால்   அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.

நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு
கையெழுத்து போடு அத்தான்...."
- ராதா படாத பாடு படுத்துவார்.



 எந்தப்படத்திலாவது சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.
சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின்  நடவடிக்கை  இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம்.

ரங்காராவ் ’ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி
கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவை   திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு
பெரிய நடிகரைப்பார்த்து  இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.

பக்த பிரகலாதா (1967) படத்தில்  ரண்யகசிபுவாக
ரங்கா ராவ் நடித்தார்.
ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர்
ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க  மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று
செட்டுக்கு வருகிறேன்.
ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"

ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில்
 செட்டியார் ஆஜர்.
ரங்காராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது.
கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது.
ஷாட் ப்ரேக்கில்  அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார்
" மிஸ்டர்  செட்டியார், இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார்.
சரியான கனம்.

 "இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு
 புராண வசனமும் பேசி
எவ்வளவு நேரம் நான் உழைக்க  முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது "

செட்டியார் கோபம் பறந்து விட்டது.
பரிவுடன் சொன்னாராம்  "நீங்கள்
 செய்தது சரிதான் "
.

ரங்காராவ் நடித்த காட்சிகள் மிகவும் விஷேசமானவை. படிக்காத மேதையில் முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’

“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமி சொன்னவுடன் கதையை முழுக்க அசை போட்டு விட்ட வசனகர்த்தா கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள்
 “ குடல புடுங்கி வக்க சொல்றீங்களே முதலாளி…”

தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள் உறவு'.
விஜயகுமாரியின் மாமனாராக.

'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.

'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்.

அவர் செய்த புராண பாத்திரங்கள்.

வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்.

'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம்,"

சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. தெலுங்கு படங்கள் சில இயக்கியிருக்கிறார்.
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா'
என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.

மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை
பலரும் மிமிக்ரி செய்வதைப்
பார்க்கமுடியும்.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை
நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது.
ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம்.
 அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்.

முதியவராக நடித்தவர் என்றாலும்
இவரை ஒரு வட்டத்துக்குள்
அடைத்து Brand செய்துவிட முடியாது.
ஏனென்றால் அவர் எஸ்.வி.ரங்காராவ்!

.........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.