Share

Dec 17, 2018

Not a fairy tale


பெங்களூரில் இருந்து அருமை நண்பன் எம்.சரவணன் சென்னை அண்ணாமலை புரம் வந்து என்னை சந்திக்க வரும்படி ஞாயிற்றுக்கிழமை அழைத்த போது உற்சாகம் தான். சரவணன் என்னுடைய அற்புதமான நண்பன். தலைசிறந்த வாசகன். ஸ்திதப்ரக்ஞை மிக்க அபூர்வ பிறவி. 

முதல் முதலாக சரவணனை ஸ்கூல் யூனிபார்மில் பார்த்தேன். முப்பத்தெட்டு வருடங்கள் முன்பு.
ராஜா அண்ணாமலைபுரம் பற்றிய ஒரு பழைய நினைவு. மதுரை சேதுபதி ஃபில்ம்ஸ் முதலாளி அப்போது என்னை இயக்குனர் மௌலியிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக சேர்த்து விட ஒரு முயற்சி செய்தார். மௌலியை சந்திக்க அப்போது அவருடைய வீட்டிற்கு அதிகாலையில் ஈகா தியேட்டருக்கு பின்னால் நான் இருந்த எம்.இ.எஸ். ஹாஸ்டலில் இருந்து கிளம்பி நேரத்தில் ராஜா அண்ணாமலை புரம் வந்து மௌலி வீட்டில் நுழைந்தேன். அவர் மனைவி என்னை விசாரித்து உட்காரச்சொன்னார். மௌலி வந்தார். “ Yes, What can I do for you?” என்று முதல் வார்த்தை பேசினார்.
அந்த முயற்சி ஈடேறவில்லை.
மூன்று வருடத்திற்கு முன் சென்னைக்கு நான் வந்த புதிதில் வேலை தேடி ராஜா அண்ணாமலை புரம் வந்திருக்கிறேன். அங்கே வேலை விஷயம் தோல்வி.
இன்று பதினொரு மணி வாக்கில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கற்பகம் அவென்யு நான்காவது தெருவில் சரவணன் அனுப்பிய டாக்ஸி நுழைந்து இடது புறம் முதல் சந்தில் டெட் எண்டில் இருந்த வீட்டு முன் நின்றது. இன்றைய கேரளா கவர்னர் சதாசிவத்தின் வீடு அது. இப்போது வாடகைக்கு விட்டிருக்கிறார்.
சரவணன், அவருடைய பார்ட்னர் ஜோதி கிருஷ்ணா இருவருடைய ஆஃபிஸ் மாடியில்.
மாலையில் ’துப்பாக்கி முனை’ படம் சிட்டி செண்டரில் ஐனாக்ஸ் தியேட்டரில் பார்த்து விட்டு ஓலா டாக்ஸியில் வீடு திரும்புகிறேன்.
டாக்ஸி டிரைவர் பெரம்பலூர் பரமசிவன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு 1990ல் சென்னை வந்திருக்கிறார். ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சேர்ந்து, ஓய்ந்த நேரத்தில் இளையராஜா வீட்டு முன் நிற்பாராம். பாரதி ராஜா ஆஃபிஸ் முன் நிற்பாராம். யாரையும் நேரில் சந்திக்க பரமசிவனுக்கு தைரியம் போதவில்லை. (ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?)பின்னர் டிரைவிங் பழகி லைசன்ஸ் எடுத்து டாக்ஸி ஓட்டுகிறார்.
சென்னையில் அவர் எங்கும் தங்கவில்லை. படுக்கையெல்லாம் காரில் தான். காலைக்கடன் இதற்கான இடங்களில். ஏர்போர்ட் வளாகத்தில் கூட குளிக்க வசதியிருக்கிறதாமே. மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஓலா ஆஃபிஸ் போய் சம்பளம் வாங்கிக்கொள்வார். பதினைந்து நாட்களுக்கொரு முறை பெரம்பலூர் போய் விடுவார்.
Harsh reality. Life does not have to be perfect to be wonderful.

திருமணமாகி ஒரு பிள்ளை பெற்றடுத்த மனைவி இப்போது இல்லை. இறந்து விட்டார். பரமசிவனின் அம்மா தான் பையனை வளர்க்கிறார்.
ஒரு வாரமோ, பத்து நாளோ கழித்து மீண்டும் சென்னை வந்து டாக்ஸி பதினைந்து நாள் ஓட்டி, பெரம்பலூர் போய்.. He has the strength to endure a difficult life.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.