Share

Jun 27, 2018

ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சர்


என் அப்பா மறைவுக்கு பின் இரண்டு மாதத்தில் எனக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஒரு காண்ட்ராக்ட் மூலமாக. ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக. ஆறு மாதமாக அப்போது வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நிலையில் இந்த வேலை.
குழந்தைகள் என் துயரங்களின் நிழலை விரட்டியடித்தார்கள்.
மன நிம்மதி என்பதை நம்புபவன் அல்ல. ஆனால் ஒரு ஆன்மீக அனுபவமாக பள்ளியில் என் அனுபவம்.
என் மீது இத்தனை அன்பை யாரும் வாழ்நாளில் காட்டியதில்லை.
2013 -2014 எனக்கு விசேஷமான கால கட்டம்.
குழந்தைகளின் பெற்றோர் என்னை தேடி வந்து பிரமிப்போடு பேசினார்கள்.
மிக சுருக்கமாக இதை எழுத வேண்டியிருக்கிறது.
என்னேரமும் ’ஸ்போக்கன் சார்’ பற்றி தான் வீட்டில் பேச்சாம். சொல்லி வைத்த மாதிரி நூறு பெற்றோர் இப்படி சொன்னார்கள்.
நான் பாடமெடுக்காத வகுப்புக்குழந்தைகள் கூட என்னை நேசித்தார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் பாடல்கள் பாடினேன்.

இண்டெர்னெட்டில் என் புகைப்படத்தை எடுத்து ஒரு ஒன்பதாம் வகுப்பு சிறுமி என்னைப்பற்றி எழுதி லேமினேட் செய்து நோட்டிஸ் போர்டில் போட்டதை ஆசிரியர்கள் என்னிடம் சொன்னார்கள்.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அபூர்வமாக ஆசிரியர் வராத போது நான் வகுப்பெடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கூட்டிப்பெருக்கும் பெண்மணியொருவர் “குழந்தைகள் உங்களைப் பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள். இப்படி நான் பார்த்ததேயில்லை சார். நீங்கள் வெள்ளிக்கிழமை பாடும்போது எனக்கு அழுகையாக வருகிறது சார்.”
மார்ச் ஒன்றாம் தேதி பள்ளிக்கு போயிருந்த போது காண்ட்ராக்ட் ஃப்ராடுகள் எனக்கு இனி அங்கு வேலையில்லை என்ற தகவலை தந்த போது கண்ணில் பட்ட பள்ளி மாணவ மாணவியரிடம் பூடகமாக இனி நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லி விட்டு, உடைந்து நான் கலங்கி விடுவதை தவிர்த்து அவசரமாக பள்ளியை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது குழந்தைகள் கண் கலங்கி என் காலில் விழுகிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவிகள். ஒன்பதாம் வகுப்பு குழந்தைகள் சிலர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் – இது தான் பள்ளியில் என்னுடைய கடைசி நாள் என்று அறிந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தவன் இரண்டு மணி நேரமாக அழுது கொண்டே தான் இருந்திருக்கிறான்.
ஜூன் மாதம் ஆரம்பித்த வேலை பிப்ரவரியோடு முடிவுக்கு வந்து விட்டதை மார்ச் ஒன்றாம் தேதி தான் நானே அறிய வந்தேன்.
எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளத்தை காண்ட்ராக்ட் ஃப்ராடுகளிடமிருந்து என்னால் வாங்கவே முடியாமல் போய் விட்டது.
மீண்டும் ஜூன் மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நேரடியாக வேலைக்கு சேர்ந்தேன். ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சராக. மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. இரண்டு பள்ளிகளுக்கும் எல்லா வகுப்பிற்கும் கம்யூனிகேட்டிவ் இங்க்ளிஷ் ட்ரைனர்.
ஜூன் 12ம் தேதி முதல் நாளே என் தலையில் இடியாக ஒரு செய்தி மொபைலில் வருகிறது. அந்த துயரத்தை தாங்கிக்கொண்டே தான் அன்றும் மறு நாள் மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலும் வகுப்பறைகளில் “ When I was just a child, I asked my mama what will I be?”  பாடினேன்.
ஆசிரியர்கள் சொல்கிறார்கள் ‘ அது எப்படி சார்? உங்களுக்கு மட்டும் பள்ளிக்கூடத்தில் இவ்வளவு Fans.’
பிசிக்ஸ் மேடம் வகுப்பில் “ அடுத்த பீரியட் நான் வர மாட்டேன். ராஜநாயஹம் சார் தான் வருவார்” என்று ப்ளஸ் ஒன் வகுப்பில் சொன்னவுடன் மாணவர்கள் மாணவிகள் பரவசமாகி எழுந்து ஆடினார்களாம். பிஸிக்ஸ் மேடம் “ என்ன மாயம் சார் இது?” என்று என்னிடமே வந்து சொல்கிறார்.
மாலை பள்ளி விட்டு செல்லும்போது “good-bye" சொல்லிக்கொண்டிருந்த பிள்ளைகள் என்னால் எல்லோரிடமும் “Adieu" சொல்ல ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் “Adieu" சொல்ல போட்டி போடும் செல்லங்கள்.
இந்த பள்ளியின் கூட்டிப்பெருக்கும் ஆயாவும் “ ஏன் சார்? இது புதுசா நான் பாக்கறேன். பதினஞ்சு வருசமா இங்கே கூட்டி பெருக்கிறேன். இப்ப தான் அதிசயமாருக்கு..  குழந்தைகள் எல்லோருமே உங்கள பாத்தவுடனே இப்படி சந்தோசப்படுறாங்களே”
குழந்தைகளோடு இருப்பது எவ்வளவு சுகமோ, அந்த அளவுக்கு நிர்வாக கடுமை கசப்பானது.
இங்கேயும் நிர்வாகம் திடீரென்று பிப்ரவரியுடன் எனக்கு வேலை முடிகிறது என்கிறார்கள்.
அந்த 2015ம் வருடம் நான் முன்னர் வேலை பார்த்த பள்ளியின் மாணவி ப்ளஸ் டூவில் மாநிலத்தில் முதல் ரேங்க்.
அவளுடைய வீட்டில் பெற்றோர் சொல்கிறார்கள்
“ இவ ப்ளஸ் ஒன் படிக்கும்போது தான் இங்க்ளீஷில கூச்சமில்லாம பேச ஆரம்பிச்சா சார். ஒங்களால தான்.”
அவளுமே ‘நாங்க தான் உங்க கிட்ட படிச்சதுக்கு பெருமைப்படணும். ப்ளஸ் டூவில நாங்க எல்லோருமே உங்கள எப்பவும் நெனச்சிக்கிட்டே இருப்போம் சார்”
மனைவிக்கு ஆபரேசன், எனக்கு கண் ஆபரேசன் எல்லாம் முடிந்து ஆகஸ்டில் வேலைக்கு சேர்கிறேன்.
ஆகஸ்ட் கடைசி நாள் மாலை. ஒரு ஏழாவது வகுப்பு மாணவனின் தாய் என்னிடம் அந்த பையனை அழைத்து வந்து பேச ஆரம்பிக்கிறார்.
“என்னேரமும் வீட்டில் உங்களைப்பற்றியே தான் பேசிக்கொண்டிருக்கிறான். எல்.கே.ஜியில் இருந்து இப்படி இவனை நான் பார்த்ததேயில்லை. இவனோட அப்பாவும் ஆச்சரியப்படுறாரு. உங்கள மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்கிறது அபூர்வம் சார். உங்களோட ஆசி இவனுக்கு எப்பவும் வேணும் சார்.”
அப்போது உதவி பிரின்ஸிபால் என்னை கூப்பிட்டு “ சார், நிர்வாகத்தில ஸ்போக்கன் இங்க்ளிஷிற்கு இந்த வருடம் பட்ஜெட் இல்லன்னு சொல்லிட்டாங்க சார். நாளையில் இருந்து உங்களுக்கு பள்ளியில் வேல இல்லன்னு மேடம் சொல்லச் சொல்லிருக்காங்க சார்.”
நிர்வாகியோ, பிரின்ஸிபாலோ என்னை சந்திக்கும் தர்ம சங்கடத்தை தவிர்த்தார்கள்.
செப்டம்பர் 13ந்தேதி குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்தேன்.
இப்போதும் பள்ளிக்குழந்தைகள் பலரும் “ We miss you a lot sir, please come back” என்று அடிக்கடி ஃபேஸ்புக்கில் மெஸ்ஸேஜ் போடுகிறார்கள். போனில் கூட என்னிடம் அன்பை பொழிகிறார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.