Share

Jun 6, 2017

வெள்ளி தாம்பாளம்



ஆறுமுகம் செட்டியார் தயாரிப்பாளர்.
பி.ஆர்.சோமு இயக்குனர்.
’தேவன் கோவில் மணியோசை’ – இந்தப்பெயரில் ஒரு படத்தை எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.


பி.ஆர்.சோமு கதை சொல்வது பிரமாதமாக இருக்கும்.
படம் எப்படி உருவாகிறது என்பது வேறு விஷயம். கதை சோமு மாதிரி சொல்ல முடியாது. The only director who delivered his story with re-recording music effect.
சோமு கதை சொன்னா கடன் வாங்கி படம் எடுப்பாங்க.

பி.ஆர்.சோமு அழகா பேசுவார்.அளவுக்கு அதிகமாவும் பேசுவார்.

அந்த நேரத்தில் தெய்வ சங்கல்பம், உயிர், எங்கள் குலதெய்வம் போன்ற படங்கள் அவர் இயக்கத்தில் வந்திருந்தன. எல்லாப்படத்திலும் முத்துராமன் நடித்தார். தெய்வ சங்கல்பத்தில் ஏ.வி.எம் ராஜனும் நடித்திருந்தார்.

சோமு தீவிர சிவாஜி ரசிகர். அதனால் சிவாஜியை வைத்து ஒரு படம் இயக்க முடியாதா என்ற தவிப்பில் இருந்தவர்.

சிவாஜி  ’தேவன் கோவில் மணியோசை’ கதாநாயகன்!
கொஞ்சம் டல்லாய் இருந்த அவருடைய மார்க்கெட் ’தீபம்’ படம் ரிலீசான பின்  சம்பளம் அப்போது ஏழு லட்சமாக உயர்ந்திருந்தது.

அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும்.
யார் சொன்ன ஐடியாவோ? எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு லட்ச ரூபாயை கௌரவமாக கொடுக்க வேண்டும்.
கனமான பெரிய வெள்ளி தாம்பாளம் வாங்கியிருக்கிறார் ஆறுமுகம் செட்டியார்.

ஒரு பொருளை தாம்பாளத்தில் வைத்துக்கொடுத்தால் பொருளை எடுத்துக்கொண்டு தாம்பாளம் திருப்பிக்கொடுக்கப்படும்.

சிவாஜி வீட்டிற்கு போய் ஆறுமுகம் செட்டியாரும், பி.ஆர்.சோமுவும் லட்ச ரூபாயை அந்த வெள்ளித்தட்டில் வைத்து அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷமாக சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார்.

பணத்தோடு வெள்ளித்தட்டும் உள்ளே போய்விட்டது.
பணத்தை எண்ணிப்பார்த்து எடுத்துக் கொண்ட பின் தாம்பாளம் திருப்பித்தரப்படுமாக்கும் என்று எட்டி, எட்டிப்பார்த்திருக்கிறார்கள்.
தாம்பாளம் திரும்பி வரவில்லை. விடை கொடுக்கப்பட்டு தயாரிப்பாளரும், இயக்குனரும் கிளம்ப வேண்டியிருந்தது.

அப்போதைக்கு சிவாஜி கணேசனை வைத்துப் படம் பண்ணப்போகிற சந்தோஷம் போதுமானதாயிருந்தது.

ஜெயலலிதா கதாநாயகியாக புக் செய்யப்பட்டார்.

’உயிர்’ படத்தின் இசையமைப்பாளர் ரமணாஸ்ரீதர் எனப்படும் விஜய்ரமணி தான் ’தேவன் கோவில் மணியோசை’ இசையமைப்பாளர். இவரும் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகராயிருந்தவர். பின்னால் வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, விக்ரம் போன்ற படங்களில் இவர் ராகவேந்தர் என்ற பெயரில் நடிகராக பிரபலமானார்.

’தேவன் கோவில் மணியோசை’படம் ஒரு ஷெட்யூலோடு நின்றது. நின்றது நின்றே விட்டது.
 ஏதோதோ காரணம். சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபம் என்றும் சொல்லப்பட்டது.

சோமு உடனே ஆறுமுகம் செட்டியாரை சமாதானப்படுத்தி இன்னொரு கதை பிரமாதமாக சொல்லி சின்ன பட்ஜெட்டில்
“நினைவில் ஒரு மலர்” படம் பூஜை. முத்துராமன், ரவிச்சந்திரன், சுமித்ரா, சுருளிராஜன், என்னத்தை கன்னையா நடிக்க, கிட்டத்தட்ட முழு படமும் முடிவடைந்த நிலையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் யாரும் வாங்கத் தயாராக இல்லாத நிலை. படம் வெளி வரவேயில்லை.

ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ’ அழைத்தால் வருவேன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த பி.ஆர் சோமுவை பார்க்க கவலை தோய்ந்த முகத்துடன், கவலை தோய்ந்த என்ன, பேய் அறைந்தாற் போல ஆறுமுகம் செட்டியார் வரும்போதெல்லாம் தாம்பாளமும் கை விட்டுப் போய் விட்ட சோகத்தை டைரக்டரே ஞாபகப்படுத்துவார்.

”சாதாரண தாம்பாளத்தில லெட்ச ரூபாய வச்சு கொடுத்திருக்கலாம். தப்பு பண்ணிட்டோம்.”
..............................................................

http://rprajanayahem.blogspot.in/2012/03/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/herculean-task.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_22.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/taste-differs.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/over-action.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.