Share

Mar 30, 2013

காலச்சுவடில் R.P.ராஜநாயஹம் கடிதம்

காலச்சுவடு இதழ் 160  ஏப்ரல் 2013 ல் பிரசுரமாகியுள்ள R.P.ராஜநாயஹத்தின் கடிதம்.
ரவி சுப்ரமணியனின் கரிச்சான் குஞ்சு பற்றிய
கட்டுரை ( காலச்சுவடு 157 .ஜனவரி 2013) க்கு R.P.ராஜநாயஹம் எதிர் வினை.
.............


”காலச்சுவடு 157- ஜனவரி 2011கரிச்சான் குஞ்சு பற்றி ரவி சுப்ரமணியன் எழுதிய கட்டுரையில் பசித்த மானிடம் நாவல் ஜேகேயின் முயற்சியால் வெளி வந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால் மதுரையில் மீனாக்ஷி புத்தக நிலையம் பதிப்பக அதிபர் செல்லப்பன் தி.ஜானகிராமன் சிபாரிசில் இதை அச்சிட்டதாக என்னிடம் கூறினார்.
தி.ஜானகிராமன் தான் மீனாக்ஷி புத்தக நிலையம் செல்லப்பனிடம் இந்த நாவலை பிரசுரிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் .
 நாவலின் தனி தன்மைக்காக மட்டுமல்ல.
கரிச்சான் குஞ்சு வின் மகளுக்கு அப்போது கல்யாண செலவுக்கு பணம் தேவை பட்டது .
செல்லப்பன் வியாபார நோக்குடன் தயங்கியிருக்கிறார். தி.ஜா வின்
வற்புறுத்தல் தான் 'பசித்த மானிடம்' நூலை பதிப்பிக்க காரணம் ஆகியிருக்கிறது .

என்னிடம் செல்லப்பன் இந்த விஷயத்தை நாவல் வெளியான மூன்றாம் ஆண்டு நான் நாவலை வாங்கிய போது தெரிவித்தார் .
விற்பனையும் படு மந்தம். செல்லப்பன் என்னிடம் பேசும்போது பசித்த மானிடம் நாவல் பிரசுரம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை பற்றி தான் ஆதங்கமாக பேசினார்
கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்கள் தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், ஸ்வாமினாத ஆத்ரேயன் ஆகியோர். கு.ப.ரா மரணப்படுக்கையில் இருந்த போது தி.ஜா வும் கரிச்சான் குஞ்சுவும் அனுபவித்த வியாகூலம் பற்றியெல்லாம் வாசகர் வட்டம் வெளியிட்ட கு.ப.ரா சிறிது வெளிச்சம் நூலில் எழுதிய கட்டுரையொன்றில் தி.ஜா குறிப்பிட்டிருக்கிறார். கரிச்சான் குஞ்சு ஒரு வகையில் தி.ஜானகிராமனின் தூரத்து உறவினர் கூட.

இதையெல்லாம் இங்கு குறிப்பிட காரணம் கரிச்சான் குஞ்சு வின் ’ பசித்த மானிடம்’ என்ற மகத்தான படைப்பின் பிரசுர விஷயத்தில் தி.ஜானகிராமனின் அக்கறையும் பெரும்பங்கு காரணம் என்பதை வலியுறுத்த வேண்டித்தான்.ஜெயகாந்தனும் சிபாரிசு செய்திருக்கலாம் தான்.”

R.P.ராஜநாயஹம்

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_02.html

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post.html

Mar 27, 2013

அசோகமித்திரனின் ‘கோயில்’ சிறுகதை


அசோகமித்திரனின் ‘கோயில்’ கதை செயலோயச்செய்து விட்டது.

 

இந்த ‘கோயில்’ கதை அவருடைய சமீபத்திய சிறுகதைத்தொகுதி  ‘1945 இல் இப்படியெல்லாம் இருந்தது’ காலச்சுவடு வெளியீட்டில் இருக்கிறது.

அசோகமித்திரன் படைப்புகளை முழுமையாய் படித்தவர்களுக்கு இந்தக் கதை தரும் அனுபவம் புதிதாய் படிப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

க.நா.சு., சுந்தர ராமசாமி இருவரையும் தகப்பனார் உறவு மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் இந்த இருவரின் நாற்பதையொட்டிய மத்திய வயது வரை தகப்பனார் உயிரோடிருந்திருக்கிறார். ஆனால் அசோகமித்திரன் இருபதையொட்டி தகப்பனாரை இழந்தவர்.

18 வது அட்சக்கோடு நாவலில் அவருடைய அப்பா உயிரோடு வருவார். அப்பா வரும் கதைகள் என்றால் சட்டென்று லீவு லெட்டர், மண வாழ்க்கை,, திருநீலகண்டர், இன்ஸ்பெக்டர் செண்பக ராமன் போன்ற கதைகள் நினைவுக்கு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் நாவல் ‘ யுத்தங்களுக்கிடையில்’- அப்பா மாயவரத்திலிருந்து செகந்திரா பாத்  போய் பிழைப்புச்சவாலை ஏற்பார். இப்படி ஒரு அன்னியப் பிரதேசத்திற்கு எது அவரை உந்தியது.

அப்பாவின் மரணத்தையொட்டி நடந்தவைகளைப் பேசும் ’அப்பாவின் சிநேகிதர்’ ‘ முனீரின் ஸ்பான்னர்கள்’ போன்ற சிறுகதைகள்.

செத்துப்போன அப்பா பற்றி எத்தனை தடவை பிரஸ்தாபித்திருக்கிறார்!
.... என் அப்பா செத்துப்போய் விட்டார்.....
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டிருக்கிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனைத் தொடர்ந்து படிப்பவர்கள் அந்த அப்பா கேரக்டரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிவர். முழுமையாக படித்தவர்களும் அந்த அப்பாவின் கதாபாத்திரத்துடன் பரிச்சயம் கொண்டிருப்பர். அப்படிப்பட்டவர்கள் இந்த ’கோயில்’ கதை படிக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாகாமல் இருக்க முடியாது.

கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவது தானே கதை என்பார் அசோகமித்திரன்.

‘யார் எழுதினாலும் கதைகளை வாசித்துவிட்டு வாசித்ததைக் கவனத்திலிருந்து விலக்கி விடுபவர்களுக்கு இச்சங்கடம் நேராது; ஆனால் தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஒரு எழுத்தாளனின் படைப்புகளில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்புகளில் இடம் பெறுமா?’ என்ற வாசகனின்  தவிப்பையும் அசோகமித்திரன் அறிந்து சொன்னவர் தான்.


அப்பா செகந்திராபாத்தில் இறந்து இருபது வருடங்கள் ஆகி விட்டது.
அப்பா பிறந்து வளர்ந்த ஊர் மாயவரத்திற்கு தன் நாற்பதையொட்டிய வயதில் சென்னையில் இருந்து கதை சொல்லி வருகிறார். அப்பா இந்த ஊரில் தான் இருபத்திரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய கஸின் சிஸ்டர் காமாட்சி வசிக்கும் பூர்வீக வீடு.

 உள்ளூரில் பார்க்க வேண்டிய வேலையை இவர் முடிக்கிறார்.
 மாயவரம் காமாட்சி கோயிலுக்கு கஸின் போகிறாள்.
இவரும் கொஞ்ச நேரம் கழித்து அந்த காமாட்சி கோயிலுக்குப் போகிறார்.

எதிரே கோயிலுக்குப் போய் விட்டுத்திரும்பும் காமாட்சி “ இன்னக்கென்னமோ எனக்கு ஏதோ பயமாயிருந்தது.” என்று சொல்கிறாள்.


 கோயிலுக்குள் வெளிச்சம் போதாது.
அவருடைய முன்னோர்கள் இந்தக் கோயிலுக்கு தினமும் போயிருப்பார்கள். இருட்டில் எதிலோ இடித்து காலில் இவருக்கு இப்போது ரத்தக்காயம்.
சுற்றி கடைசிப்பக்கத்தை அடைகிறார்.


அவ்வளவு நீளப்பிரகாரத்திற்கு ஒரு விளக்கு கூட கிடையாது.பயமாகத்தான் இருக்கிறது. தூரத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் அசோகமித்திரனையே பார்த்தபடியே முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்.
இருவரும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள். யார் அது? யார்?
கன்னத்தில் அறைந்தது போல அடையாளம் தெரிகிறது! இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்த அப்பா தான் இவர் முன்னே நின்று கொண்டிருக்கிறார். ‘அப்பா!’ என்று அசோகமித்திரன் கத்துகிறார்.

கோயிலாக இருந்தாலென்ன? பழைய கட்டிடங்களுக்கெல்லாம் தனியாகப் போகக்கூடாது.

You tremble and look pale:
Is not this something more than fantasy?
.....What may this mean?.... Why is this?..

- Shakespeare in Hamlet


........................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/1948.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_13.html

Mar 23, 2013

P.S.வீரப்பா



ஆஜானுபாகுவான, ஆண்மை மிக்க வில்லன் பி.எஸ்.வீரப்பா.
   
1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.

வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’

மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’

'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’

ராஜராஜன் (1957)
’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘

நாடோடி மன்னன் (1958)
நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!

சிவகெங்கைச் சீமை (1959)
’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
(ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை! 

இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில்  வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
 வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!

வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.
குமுதத்தில்(20-03-2013 இதழ்) கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள அபத்தம் - ”பி.எஸ்.வீரப்பா , ஓமர் ஷெரீப் என்ற என்கிற அட்டகாசமான ஹாலிவுட் வில்லன் நடிகரின் நடை, உடை, பாவனைகளை அதே அட்டகாசமான சிரிப்புடன் பின்பற்றினார்”

ஒமார்  ஷெரிஃப் ஹாலிவுட்டில் நடிக்கவந்த முதல் படம் பீட்டர் ஓட்டூல் கதாநாயகனாக நடித்த லாரன்ஸ் ஆஃப் அரேபியா. 1962ல் வந்த ஹாலிவுட் படம். உலகெங்கும் ஒமார் ஷெரிஃப் பிரபலமானது டேவிட் லீன் இயக்கிய ’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’வால் தான்.
இதில் மஹாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச்சீமை எல்லாம் 1950களில் வந்த படங்கள். பி.எஸ் வீரப்பா எப்படி ஒமார் ஷெரிஃபை  காப்பி அடித்து நடிக்க முடியும்.

’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ வோடுஒமார் ஷெரிஃப் நடித்த டாக்டர் ஷிவாகோ (1965) ஜெங்கிஸ்கான் (1965), மெக்கன்னா’ஸ் கோல்ட் (1969) பர்க்ளர்ஸ் (1971) இந்தியாவில் பார்க்கக் கிடைத்த முக்கியப்படங்கள்.
இந்தப்படங்கள் பார்த்து ஒமார் ஷெரிஃப் இன்ஸ்பைரேஷனில் வீரப்பா நடித்தார் என்பது படு அபத்தம்.
போகிற போக்கில் இப்படி எதையாவது உளறுவது சகிக்கமுடியவில்லை.
நார்மன் விஸ்டம் என்ற பிரிட்டிஷ் நடிகரைத்தான் சந்திரபாபு காப்பியடித்தார் என்று சொல்வதும் ரொம்ப வேடிக்கையான விஷயம். சார்லி சாப்ளின் துவங்கி பலரின் பாதிப்பு அவரிடம் உண்டு.
சந்திர பாபு ஆங்கிலம் பேசுவதே அமெரிக்கன் ஆக்ஸண்ட்டில்.சந்திரபாபுவின் மேல் நாட்டுப்பாணி என்பது ஹாலிவுட் வகையைச் சார்ந்தது.

The Square Peg  (1958)படத்தில் நார்மன் விஸ்டம் நடித்த ஒரு காட்சியை பலே பாண்டியா(1962)வில் எம்.ஆர் ராதாவுக்கு அப்படியே இயக்குனர் பந்துலு காப்பியடித்து வைத்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களைப்பார்த்து விட்டு ராதா நடிப்புக்கு நார்மன் விஸ்டம் என்ற பிரிட்டிஷ் நடிகரைப் பின்பற்றினார் என தீர்மானிக்கக் கூட இன்று ஆட்கள் இருப்பார்கள்!

வி.நாகையாவை பால் முனியை பின்பற்றினார் என்று கௌதம சித்தார்த்தன் சொல்வதும் படு அபத்தம். இருவருக்கும் நடிப்பில் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.எம்.எஸ்ஸின் கணவராக நடித்த மீரா(1945), கோராகும்பராக நடித்த ’சக்ரதாரி’(1948) போன்ற நாகையா படங்களை பால் முனியின் Scar face (1932) படத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால்  சிரிப்புத் தான் வருகிறது.
சி.என்.அண்ணாத்துரை எப்போதும் பால்முனியை எம்.ஆர் ராதாவுடன் ஒப்பிடுவார். ஒப்பிடுவது வேறு. காப்பி அடித்தார், பின்பற்றினார் என்பது வேறு. ராதாவோடு ஒப்பிடப்பட்ட பால்முனியை சாத்வீக நடிகர் நாகையாவோடு சேர்க்கமுடியுமா?
 ராதா தன் நடிப்புக்கு பால்முனியை காப்பியடிக்கவில்லை.
அப்படிப்பார்த்தாலும் வீரப்பா நடிப்பை முன் வைத்து ஒமார் ஷெரிஃபை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். வீரப்பா தான் சீனியர் ஆக்டர்.
 இருவர் நடிப்பில், ஏன் சாயலில் கூட உள்ள ஒற்றுமை மிக இயல்பாய், தற்செயலாய் நடந்த விஷயம். இருவரும் ஒருவரை ஒருவர் படம் பார்த்து அறிந்திருக்கவில்லை.


சரித்திரப்படங்களுக்கென்றே அளவெடுத்து உருவாக்கப்பட்டவர் வீரப்பா. ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டமான பிரத்யேக ஸ்பெஷல் ’ஹாஹாஹாஹா’ சிரிப்பு.
அவருடைய நடிப்பில் ஒரு காவியத்தன்மை, காப்பியத்தன்மை இருந்ததால் சமூகப்படங்களுக்கு வில்லனாக அவர் பொருத்தமானவராக இருந்ததில்லை. சமூகப்படங்களில் சோபிக்கவில்லை என்றே சொல்லலாம்.
ஆனந்த ஜோதி (1963), சங்கமம் (1970) பல்லாண்டு வாழ்க (1975) ஆகிய சமூகப்படங்களில் வில்லனாக வீரப்பா நடித்துள்ளார். 

வீரப்பா பல திரைப்படங்களின் தயாரிப்பாளர். பி.எஸ்.வி பிக்சர்ஸ் என்பது அவரது படக்கம்பெனி. ஆலயமணி (1962) அவர் தயாரிப்பில் வந்த படம். அதில் கூட ஒரு நல்ல சீனில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது திலீப்குமார், வஹிதாரெஹ்மான் நடித்து ஆத்மி (1968) ஹிந்திப்படம் கூட வீரப்பா தயாரிப்பில் வெளிவந்துள்ளது.


..................................................... 


http://rprajanayahem.blogspot.in/2012/08/scarface.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/doctor-zhivago.html

http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_22.html




Mar 20, 2013

கம்பரும் ஒட்டக்கூத்தரும்



”கம்பரை ஒட்டக்கூத்தர் என்ன பாடு படுத்தியிருக்கிறார் தெரியுமா?” என்று கி.ராஜநாராயணன் பேசும்போது என்னிடம் கேட்டார். 
நான் ஆர்வமாக “ சொல்லுங்க அய்யா ” என்றேன்.


கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படும்போது கம்பர் எழுதிய ’துமி’என்ற வார்த்தையை ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்திருக்கிறார். துமி என்று தமிழில் வார்த்தையே கிடையாது என்பது ஒட்டக்கூத்தர் வாதம்.

மன்னர் திரும்பி கம்பரைப் பார்த்திருக்கிறார். “ மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் தான் துமி.” என்று கம்பர் பதில் சொல்லியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் தமிழில் துமி கிடையவே கிடையாது என்று சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆடியிருக்கிறார். கம்பரின் காவிய அரங்கேற்றம் நிறுத்தப்பட்டு விட்டது.


மறு நாள் அரசர் நகருலா செல்கிறார். கூடவே கம்பரும் ஒட்டக்கூத்தரும். ஒரு வீட்டில் இருந்து ஒரு வினோத சத்தம். “ இது என்ன சத்தம்” என்று ராஜா கேட்கிறார். கம்பர் உடனே “ மத்தினால் தயிர் கடையும் சத்தம் மன்னா” என்று சொல்லியிருக்கிறார். 
ராஜா இதையெல்லாம் எங்கே கண்டிருக்கிறார். கேட்டிருக்கிறார். “ இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறதே! கொஞ்சம் நேரம் நின்று கேட்போமே” என்று சொல்லியிருக்கிறார்.

வீட்டின் உள்ளே குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. ராஜாவுக்கு உள்ள ஆர்வம் குழந்தைகளுக்கும்! அப்போது ஒரு பெண் பேசுவது கேட்கிறது: பிள்ளைகளா! கொஞ்சம் தள்ளி நில்லுங்க. துமி தெறிக்கும்!
ராஜா : இதோ துமி என்று வார்த்தை இருக்கிறதே!
தயிர்த்துளி குழந்தைகள் உடம்பு மீது தெறித்து விடும் என்று எச்சரிக்கிறாள் என்பதை கம்பர் விளக்குகிறார்.

ராஜாவுக்கு நேற்று கம்பர் ராமாயணத்தில் வாசித்தது சரி தான் என்று புரிந்து விடுகிறது.


தோயும் வெண் தயிர் மத்தொலி துள்ளவும் ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் என்று சொன்னதும் கம்பன் தான்!

மறு நாள் கம்பராமாயணம் மீண்டும் அரங்கேற்றம்.
கம்பர் நெகிழ்ந்து ராமாயணத்தை ஆரம்பிக்கும் முன் கண்ணில் நீர் மல்க தயிர் கடைந்த பெண்ணை நினைந்து “ சாட்சாத் கலைவாணியே வந்து என் சாகித்யத்திற்கு சாட்சி சொன்னாள்” என்று prologue பாடினாராம்!

கி.ரா. இந்த இடத்தில் நிறுத்தி என்னிடம்” ’தூமை’ என்று பெண்கள் மாதவிலக்கு பற்றி சொல்வதும் இதுவேதான். துளி,துளியாக யோனியிலிருந்து ரத்தம் வெளியேறுவதும் ’துமி’ தான்.” என்று விளக்கம் செய்தார்.

ரசிகமணி டி.கே.சி கம்பராமாயணத்தின் கடைசிபகுதி ஒட்டக்கூத்தர் எழுதி செருகியதென்று ஆராய்ந்து சொன்னார் என்பதையும் கி.ரா. சொன்னார்.

அரசர் அந்தப்புறம் செல்லும்போது ஒட்டக்கூத்தரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். அரசருக்கு ராணியைப் புகழ்ந்து ‘அவளே! இவளே! உள்ளத்தில் இருப்பவளே! என்னவளே!பொன்னவளே! உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகுதடி!’ என்றெல்லாம் கவி பாடத்தெரியாதே. அதனால் புலவர் ஒட்டக்கூத்தரை பள்ளியறை முன் பாட அழைத்துப் போயிருக்கிறார்.

பள்ளியறை கதவு முன் நின்றவுடன் ஒட்டக்கூத்தர் “ நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமைய ப் பத்தி ராணிக்கு இப்பத் தெரியும் பாருங்க!” என்று ராஜாவிடம் சொல்லிவிட்டு உற்சாகமாக “ ராணி! உங்க கண்ணாலன் ராஜா வந்திருக்கிறார். கதவைத் திறங்க!” என்று ஆரோகணமாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்.உச்சஸ்தாயி! 

ராணி பயங்கரக்கோபமாகி உடனே,உடனே ரெட்டைத்தாழ்ப்பாள் போட்டாளாம்!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

அன்னைக்கு ராஜாவுக்கு டொக்கு போடுற சான்ஸ் மிஸ்ஸாயிருச்சி!


அரசர் ஒருவேளை கம்பருடன் போயிருந்தால் மகாராணி சந்தோஷமாக கதவைத்திறந்து “ உள்ளே வாங்க!” என்று சொல்லியிருப்பாள். கம்பரை உபசரித்து அனுப்பி விட்டு சயனப் படுக்கைக்கு ராஜாவுடன் சென்றிருப்பாள்.

கம்பர் பெருமை பற்றி, ஒட்டக்கூத்தர் போலித்தனம் பற்றி ராணி தெரிந்து வைத்திருந்தது பெரிய விஷயம்.

  ஔவைபாட்டி நடந்த களைப்பு தீர ஒரு கோவில் வெளிச்சுவற்றில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்து ரிலாக்ஸ்டாக கால்கள் இரண்டையும் நீட்டியிருக்கிறாள்.
 ’உஷ்’ என்று வாய் குவித்துக் கண்மூடித் திறந்திருக்கிறாள். 
அரசர் வருவது தெரிந்திருக்கிறது. 
உடனே ஒரு காலை மடக்கியிருக்கிறாள். 
அடுத்து கம்பர் வருவதைப்பார்த்திருக்கிறாள். 
உடனே மிகுந்த மரியாதையுடன் இன்னொரு காலையும் மடக்கிக்கொண்டாளாம். 
பின்னால் பார்த்தால் ஒட்டக்கூத்தர் பந்தாவாக வந்திருக்கிறார். ஔவைப்பாட்டி உடனே இரண்டு காலையும் நீட்டிவிட்டாளாம்! ‘ ஒனக்கு எதுக்குடா மரியாதை!’


.........



 தூமை என்பதை முன் வைத்து  கண்ட சம்பவம் ஒன்று.


தெருவில் ஒரு சண்டை. ஒரு கிழவி ஒரு கட்டத்தில் ஒரு இளைஞனைப் பார்த்து உரக்க “ என் தூமையைக் குடிக்கி “ என்று கூவினாள். உடனே அவன் அவளிடம் ’உனக்கு இந்த வயசிலுமா வடியுது?’ என்று கேட்டு விட்டு உடனே, கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்து ’ விலகு, விலகு, ஒதுங்கு’ என்று அந்தக்கிழவியை நோக்கி முன்னேறி வந்து அவள் முன் மண்டியிட்டு, குழாயில் தண்ணீர் குடிக்க கை குவிப்பது போல குவித்து, 
” ஊத்தாத்தா..ஊத்து…ஊத்தாத்தா..” என்றான்! 


...............................................
 


http://rprajanayahem.blogspot.in/2009/10/amadeus.html

http://rprajanayahem.blogspot.in/2009/04/blog-post_24.html 

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_6727.html

Mar 17, 2013

இத்தாலி



இத்தாலியை நினைக்கும்போது முஸோலினியைத்தான் யாருக்கும் 
பிடிக்காது.
இத்தாலியை நினைக்கும்போது ஓவியன் மைக்கல் ஆஞ்சலோ
திரை இயக்குனர்கள் ரோஸ்ஸலினி, ஃபெல்லினி, பஸோலினி என்று சுவாரசியங்கள், 


ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டி நீரோ, லியோனார்டோ டி காப்ரியோ.

அந்தக்காலத்தில் மதுரை ரீகல் தியேட்டரில், பரமேஸ்வரி தியேட்டரில்  படம் பார்க்கும் தரை டிக்கட் ரசிகர்களுக்கு சோபியா லாரனைப் பிடிக்கும். ஆனால் சுத்தமாக ஜீனா லோலா பிரிகிடாவைப் பிடிக்காது. 
ரொம்ப பந்தா,ஸ்டைல்,மேக் அப் பண்ணுகிற,பார்க்க அசிங்கமான, அவலட்சண முகம் கொண்ட  below average பெண்களைக் குறிக்க ‘ ஜீனா லோலா பிரிகிடா’ என்று விவரிப்பார்கள்.டப்பா தாட்டி டா! ஜீனா லோலா பிரிகிடா!

 
  The Name of the Rose  நாவல் எழுதிய உம்பர்ட்டோ ஈக்கோ,  


   
Italian food! – The food stinks, Except in Italy!
பீட்ஸா, ஐஸ்கிரீம்
Italy – Musical country!  

தென்றல், முதல் காதல், இத்தாலி இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தால் விரக்தியான மனிதன் கூட குதூகலமாகிவிடுவான் என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவம் பேசினார்.

ஆனால் இந்தியர்களுக்கு போஃபர்ஸ் துவங்கி ஆடம்பர ஹெலிகாப்டர் பிரச்னை போன்றவைகளால் இத்தாலி என்பது குறித்து ஒரு ஒவ்வாமையுணர்வு.

இந்திய அரசியல் அரங்கில் சில கட்சிகளுக்கு இத்தாலி மீதுள்ள வெறுப்புக்கு சோனியா காந்தி ஒரு காரணம்.

ராஜீவ் காந்தி பிரதமராயிருக்கும்போது கம்யூனிஸ்ட் எம்.பி. சதுரனன் மிஸ்ரா சொன்னது :  It is so hard to approach the Prime Minister, in the front there are battalions, at the rear there are Italians.

இத்தாலிய கப்பல் கேரளக்கடற்கரை மீனவர்களை சுட்டுக்கொன்றது. அந்த இத்தாலிய கைதிகள் இருவருக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பரோலில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் திரும்பி மீண்டும் சிறை புகுந்தார்கள். நேர்மை, கண்ணியம் என்று நினைக்கவேண்டியிருந்தது.
மீண்டும் இத்தாலி பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டி இத்தாலிய கைதிகள் இன்னொரு முறை தாய் நாடு சென்றார்கள். இந்திய சிறை திரும்பவில்லை. இத்தாலிய அரசே உடந்தை. இந்தியாவில் இத்தாலியத் தூதர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று நியாயஸ்தலம் தடை விதித்து விட்டது.

கேஸ் வாபஸ் வாங்குவதற்கு பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு கோடி ரூபாய் வரை தருவதாக இத்தாலி சொன்னதை ஏற்றிருக்கவேண்டும் என்று தினமணி தலையங்கம்.


ஃபாரின் டிப்ளமஸி பற்றி நன்கறிந்த நட்வர்சிங் ( முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ) சொல்வது : Italian Ambassador can’t be prevented from leaving.

 There’s sanctity about the rules of old diplomacy. Infact modern diplomacy started in Italy.
’இத்தாலி செய்திருப்பது நம்பிக்கைத் துரோகம் தான். இது இரண்டாம் உலகப்போரின்போது  பேர்ல் ஹார்பரில் குண்டு போடப்பட்ட சம்பவத்திற்கு சமம் என்கிறார் நட்வர்சிங். அந்த சமயத்தில் கூட ரஷ்யா மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவிலிருந்த ஜெர்மனி தூதர் கைது செய்யப்படவில்லை. அடாவடியான ஜெர்மனியிலும் கூட அப்போது எதிரி நாட்டுத்தூதர்கள்  வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்படவில்லை. எனவே இத்தாலிய தூதர் மன்ஸினி இந்தியாவை விட்டு வெளியேறத் தடை செய்வதெல்லாம் சாத்தியமானதில்லை என்றும் சொல்கிறார். 


ஹெலி காப்டர் ஊழல் பிரச்னை, கேரள மீனவர் பிரச்னை, இத்தாலிய கைதிகள் போன்ற இடியாப்பச்சிக்கல்கள் இருக்கும் நேரத்தில் சென்ற டிசம்பரிலிருந்து இத்தாலியில் இந்தியத்தூதருக்கான இடம் காலியாக இருப்பது Irony! இத்தாலியின் இந்தியத்தூதராக செல்ல வேண்டிய B.K.குப்தா ‘ நான் மார்ச் ரெண்டாவது வாரம் போகிறேனே..’என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்று ஒரு தகவல். அதே நேரம் நட்வர் சிங் சொல்வது வேறு மாதிரியிருக்கிறது. “ Right now, we don’t have an ambassador in Italy. We told him not to go.”
நட்வர்சிங் இந்த இடியாப்பசிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையானதாக சொல்வது – The temperature needs to cool first, especially in Parliament and in the MEDIA.


இத்தாலியின் நெஞ்சில் சொருகப்பட்டுள்ள வாளாகிய வாட்டிகனில் புதிய போப்.
Every country gets the circus it deserves. Spain gets the bull fights. Italy the church. America Hollywood. – Erica Jong


 ஆனால் கடந்த சில காலமாக போப்கள் இத்தாலிக்கு வெளியில் இருந்து போலந்து, ஜெர்மனியிலிருந்தும், இன்று அர்ஜெண்டைனாவிலிருந்து வருகிறார்கள்.

.......................................................

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_16.html