Share

Aug 30, 2012

எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள்

நேற்று  2.9.12 தேதியிடப்பட்ட ஜூனியர் விகடனில் கழுகார் பதிலில் இந்த பதிவின் முதல் பாராவில் உள்ள விஷயம்  இடம்பெற்றுள்ளது.அதனால் இந்த பதிவு மீள் பதிவு செய்யப்படுகிறது.

 ‘பி.எஸ்.ஞானம்’ என்ற என் பதிவில் பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் எப்படி அந்த வில்லி நடிகையை திட்டுவார்கள் என்று எழுதியிருந்தேன். அதன் பின்னர் ஆனந்த விகடனில்  வெளியான சுகாவின் தொடர்கட்டுரையில் ஷோலே படம் பார்ப்பவர்கள் தியேட்டரில் அம்ஜத்கானை எப்படித்திட்டுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது

Nov 23, 2009



 சங்கரதாஸ் சுவாமிகளை " நாடக உலகத்தந்தை " என எல்லோரும் சொல்வதை எம்.ஆர் .ராதா ஏற்றவரல்ல.' நாடக உலகின் தந்தை ஜெகந்நாதய்யர் தான் 'என எப்போதும் உறுதியாக ராதா சொல்வார்.

" மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சபா." முதலாளி ஜெகந்நாத அய்யர்.

ஜகன்னாத அய்யர் நூறு வருடங்களுக்கு முன் தன் நாடகக் கம்பெனியில் நடிகர்களிடம் ' சம பந்தி போஜனம் ' கொண்டு வந்து புரட்சி செய்தவர் .

கிட்டப்பா இந்த நாடக கம்பெனியில் சேர தன் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரோடு வந்தார் ." கிட்டப்பா ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது ''ன்னு சொல்லி ஜகன்னாத அய்யர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஜகன்னாத அய்யர் கம்பெனியிலிருந்து என் . எஸ் . கே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி கொல்லம் போய் டி .கே .எஸ் . கம்பெனியில் சேர்ந்து விட்டார். ஜகன்னாத அய்யர் உடனே போலீசில் ' கம்பெனி நகையை திருடி விட்டான் ' என்று என் .எஸ் .கே மீது புகார் கொடுத்து விட்டார் . போலிஸ்
என் .எஸ் . கே யை விலங்கிட்டு அவரை ஜகன்னாதய்யரிடம் அழைத்து வந்தார்களாம் . மீண்டும் கம்பெனியில் சேர்ந்தார் என் .எஸ் .கே .

எம் . ஆர் .ராதாவின் நடிப்பு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் பலமாகப் போட்டவர் ஜகன்னாத அய்யர் தான் . இவர் மீது ராதாவுக்கு மிகுந்த மரியாதை.

ராதா தன் வாழ்க்கையில் ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து தொழுகையே நடத்திய உத்தமர் ஒருவர் உண்டு . அவர் ஜட்ஜ் கணேசய்யர் ."கண் கண்ட தெய்வம் கணேசய்யர் " என்று நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.
"விமலா அல்லது விதவையின் கண்ணீர் " என்ற நாடகத்திற்கு நாகையில் சனாதனிகள் தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அந்த நாடகத்தை ஜட்ஜ் கணேசய்யர் பார்த்து விட்டு ராதாவை வானளாவ புகழ்ந்து நாடகம் நடப்பதற்கு தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கினார் .



தான் காதலித்த ஒரு பெண்ணை சக நடிகர் சைட் அடித்தார் என்பதற்காக ராதா கோபமாகி அந்த நடிகர் மீது திராவகத்தை ஊற்றிய போதும் கணேசய்யர் அந்த கேசில் இருந்து காப்பாற்றினார்.

இந்த திராவகம் வீசப்பட்ட நடிகர் பின்னாளில் ராதா எம்ஜியாரை சுட்ட கேசில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார் .ஆனால் அவர் ராதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் . ஏனென்றால் அந்த நடிகர் அந்த நேரத்தில் ராதாவின் நண்பர் ஆகியிருந்தார் . நண்பரானது எப்படி என்பது புரியாத புதிர் என்கிறார் ராதா .

திராவிட கழக மாநாடு ஒன்றில் கொடி பிடித்து குதிரையில் ராதா வந்த போது அந்த குதிரையை ஒரு காங்கிரஸ் காரர் சீண்டி அதன் பின்னங்கால்களால் உதை வாங்கி இறந்து போனார் . அவரை எச்சரித்தும் அந்த ஆள் மீண்டும் குதிரையை சீண்டியதை தொடர்ந்ததால், ராதா தான் டெக்னிக் ஆக குதிரை கடிவாளத்தை பிடித்து உதைக்கும்படி செய்திருக்கிறார் . அந்த கேசில் இவருக்கு தூக்கு கூட கிடைத்திருக்க வேண்டியது. அப்போதும் ராதாவுக்கு ஆபத் பாந்தவராக கணேசய்யர் தான் காப்பாற்றியிருக்கிறார் .

இந்த தன் குற்றங்களை சொல்லும்போது ராதா இந்த விஷயங்கள் பத்திரிகையில் வெளிவரும்போது ஜட்ஜ் கணேசய்யர் கெளரவம் பாதிக்கப்படக்கூடாதே என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார் .

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டீசாருக்காக யுத்த எதிர்ப்பு நாடகங்கள் நடத்துவதற்கு ராதாவுக்கு மிகப்பெரிய தொகையை ஏற்பாடு செய்து கணேசய்யர் உதவி செய்தார். அவர் வாழ்வில் மகத்தான திருப்பம் இந்த உதவி . அப்போது
எம்.ஆர்.ராதா தளுதளுத்து கண்ணில் நீர் பொங்க கணேசய்யரை கையெடுத்து கும்பிட்டு சொன்னார் " தெய்வம் வெளியே இல்லே. நமக்குள்ளே தான் இருக்குன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்னிக்குத் தான் அந்த தெய்வத்தை நேருக்கு நேராப் பார்க்கிறேன். "

ராதா வாழ்விலிருந்து முழுவதுமாக வறுமையை அகற்றியவர் ஜட்ஜ் கணேசய்யர் தான். புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே அப்புறம் ராதாவைத்தேடி ஓடி வந்து குவிந்தது .

ராதா மதித்த இன்னொரு பிராமணர் திருவாரூர் சர் ஆர் . எஸ் . சர்மா. அவரைப் பற்றி ராதா பூரிப்புடன் சொன்னது " அவர் ஆரியர்களுக்கு கொடுத்ததை விட திராவிடர்களுக்குக் கொடுத்தது தான் அதிகம்."

பரத நாட்டிய கலைக்கு பிராமணர்களால் தான் உன்னதப் பெருமை கிடைத்தது என ராதா அழுத்தமாக நம்பினார்." ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதக்கலை பிராமணர்களால் புனிதமான கலையாயிடிச்சி. அந்தக் கலைக்காக பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ப்பணம் செய்றாங்களே!" பரவசமாக சொல்கிறார் .

'சிறைச்சாலை சிந்தனைகள் ' என்ற நூல் ராதா அப்போது எம்ஜியார் கேசில் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் விந்தன் அவரை பேட்டியாக எடுத்தது.
ராதாவின் ஒவ்வொரு அமர்க்களமான,அடாவடியான கருத்துகளுக்கும்
( அவருடைய அபிப்பராயங்கள் பல பாமரத்தனமானவை ) விந்தன் comments தான் நூலில் ஒரு செயற்கையான குறை. ஏனென்றால் ப்ளாகில் வருகின்ற பல அபத்த பின்னூட்டங்கள் போலவே இருக்கின்றன விந்தன் தன் பேட்டியில் எம் ஆர் ராதாவின் பேச்சில் பிரமித்து ஏதேதோ சொல்வது .

கதிரில் வெளிவந்த தொடரை முழுவதும் பைண்ட் செய்து ஒரு நண்பர் வைத்திருந்ததை 25வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் . ஆனால் இப்போது வெளி வந்துள்ள நூலில் பல விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என தெரிகிறது .

அவர் காலத்து மற்ற நடிகர்களைப் போலவே ராதா நிறைய..நிறைய்ய பலவீனங்கள் கொண்ட மனிதர். ஆனால் அவரிடம் ஏனைய நடிகர்களிடம் இருந்த hypocrisy கிடையாது என்பது தான் அவரின் குண விஷேசம். தான் செய்த மோசமான தவறுகளைக்களைக்கூட வெளிப்படையாக பேசிய ஒரே தமிழ் நடிகர் ராதா மட்டுமே.
ராதா அவருடைய அபூர்வமான தனித்துவமான நடிப்புக்காக மிகுந்த கவனத்துக்குரியவர்.

1 comment:

  1. :) எனக்குக்கூட அந்த சிறு வயதில் ஞானம் அம்மாவை பாசமலர் திரைப்படத்தில் பிடிக்காது... அது திரைப்படம் என்பதை மீறிய வாழ்வியலாக மனதில் நினைத்ததுதான் காரணம். காலப்போக்கில் மனம் மாறிவிட்டேன்!
    ஆனால் பாசமலர், தேவையில்லாத சோகத்தை ஒரே மூச்சாக கொடுத்த அழுவாச்சி படம்... முக்கியமாக இளம்பெண்கள் கூட்டத்தை கவர்வதற்காக!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.