Share

Jan 26, 2021

பத்மஸ்ரீ பாப்பையா

 பத்மஸ்ரீ பாப்பையா. 



அமெரிக்கன் கல்லூரி ஒபெர்லின் ஹால் முன் எனக்கும் மற்றொரு மாணவனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு என்று ஆகிவிட்டது. 

என் மீது எந்த தவறும் கிடையாது. 

மதுரையில் அடிக்கடி பார்க்க கூடியது "கஞ்சா குடித்து மெண்டல் ஆவது. " அப்படி ஆனவன். 

என் மீது எப்படியோ ஒரு பகையை மனத்தில் உருவாக்கி கொண்டான். Paranoid delusion.


 ஏற்கனவே பேராசிரியர்களின் ஓய்வறைக்கு சென்று பிரச்சினை செய்திருக்கிறான். இப்போது என்னிடம்.


இன்று வரை மன நிலை பாதித்தவர்களுக்கும் எனக்கும் ஒத்து போவதே இல்லை.

என்னுடைய ராசி அப்படி.


திடீரென்று அவன் கத்தியை எடுத்து விட்டான். மதுரையில் கத்தியை சண்டையில் ஒருவன் எடுத்து விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். விலக்கி விட மாட்டார்கள். 

அவன் கத்தியால் குத்த பலமுறை கடுமையாக முயற்சிக்கிறான். ஆனால் நான் பயப்படாமல் அவனை அடிக்கிறேன். 

லாவகமாக கத்தி குத்திலிருந்து 

தப்பித்துக் கொண்டே அவனை தாக்குகிறேன்.

விலக்கி விட மாணவர்கள் எல்லோரும் பயப்பட்ட அந்த சூழலில்தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்னை பின் பக்கமாக வயிற்றோடு பிடித்து தூக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறி நடக்கும் போதே எங்கள் ஆங்கில பேராசிரியர் R.நெடு மாறன் அந்த கத்தி வைத்திருந்த மாணவனை இறுக்கமாக பிடித்து கொள்கிறேன். அவன் வேகம் தணியும் வரை 

அவர் பிடி தளரவே இல்லை.

கத்திகுத்து விழுந்து உயிரையே இழந்திருக்க வேண்டிய என்னை அன்று காப்பாற்றியவர்கள் பேராசிரியர்கள் சாலமன் பாப்பையாவும்,நெடுமாறனும் தான்.

என் கல்லூரி காலத்தில் பாப்பையா எனக்கு பக்கத்து தெருக்காரர் கூட. அதனால் கல்லூரியில் பார்த்து கொள்வதோடு, ஏரியா வில் லீவு நாளையிலும் ஏ.ஏ.ரோடில் எப்போதும் 

அவருடன் உரையாடிகொள்ள முடியும்.


பெரியகுளத்தில் தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பாப்பையா, தமிழ்குடிமகன் எல்லாம் ஒரு வழக்காடு மன்றம் நடத்த வந்தார்கள். பாப்பையா நடுவர். உற்சாகமாக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர் முன் நான் போய் நின்றேன். 

அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேச்சை கொஞ்சம் நிறுத்தி என்னை பார்த்து " என்னய்யா இங்கே ?" என்றார். "இங்கே தபால் துறையில் வேலை செய்றேன் அய்யா ." என்று நான் சொன்னேன்.

 "அப்படியா. ரொம்ப சந்தோசம் யா "- பதிலுக்கு அவர் சொல்லிவிட்டு

அதன் பின் தான் பட்டிமன்ற பணியை தொடர்ந்தார்.


எங்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர்

 R. நெடுமாறன் சில காலம் முன் 

வெற்றிகரமாக “Speak to achieve course” சென்னையில் நடத்தி கலக்கி கொண்டிருந்தார்.


 "மார்க் ஆண்டனி "என்று தான இவரை பற்றி சொல்வேன் .இரண்டு திரை படங்களிலும் தலையை காட்டி இருக்கிறார்.


நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். 

அமெரிக்க ஆங்கிலம்! தமிழில் முழங்கும் போது இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது. 

உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.