Share

Mar 18, 2020

மதுர கவர்னரும் மதுர காவல் தெய்வமும்

மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒப்பனைகள் கலைந்தெறிந்த ஜி.நாகராஜன்,
நிரந்தர தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம்,
மவுண்ட் ரோட்டில் பட்டினியும் வறுமையும் பின் துரத்த சிற்பியின் நரகத்தை எழுதிக்கொண்டிருக்கும் புதுமைப்பித்தன்

- கோணங்கி

கோணங்கியை மிகவும் பாதித்த இரண்டு மதுரை கண்ட எழுத்தாளர்கள்
ப. சிங்காரம், ஜி. நாகராஜன்.

'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்' கதையிலும் 'சபிக்கப்பட்ட அணில்' சிறுகதையிலும்
ஜி. நாகராஜன் காணக்கிடைப்பார்.

'த ' நாவலில் உள்ளிருக்கும் "மங்கம்மாள் சத்திரம் வால் க்ளாக்"
டிக்டாக் - 1, டிக் டாக் - 2, டிக் டாக்- 3, டிக் டாக்- 4

திண்டுக்கல் ரோட்டில் Y. M. C. A க்கு வந்த பர்மா அகதி ஒருவன் கேட்கிறான் "சிங்காரம் தாத்தா இருக்கிறாரா?"

கண் தெரியாத டெலிபோன் பூத் இளைஞன் சொல்கிறான் "சிங்கம்புணரிக்கு போயிருக்கிறார்"

இந்த குருடன் தீவிர வாசகன். டெலிபோனில் பிறரை வாசிக்க சொல்லியே நிறைய நூல்களை படிக்கிறவன்.

திருமங்கலத்திற்கு போன் போட்டு ஜி. நாகராஜன் எழுத்திற்காக தேடுகிறான்.

ஒரு பெண் குரல் வாசித்து காட்டுகிறது.

கோணங்கியிடம் பேசுவது விசேஷமானது.

மதுரை கவர்னர் ப. சிங்காரம்.
மதுரை நகரின் காவல் தெய்வம் ஜி. நாகராஜன் என்ற கோணங்கியின் உருக்கம் உறுதியானது.

மதுரை இலக்கியம்னு போறவன அதிசய புகைக்காரனா மாத்திடும்.

எல்லா குதிரை வண்டிக்காரனும், ரிக் ஷா வண்டிக்காரனும் ஜி. நாகராஜன் தான்.

மதுர குதிரை வண்டிக்காரனெல்லாம் பதினென் கீழ் சித்தர்கள்.

இலக்கியவாதிகள நீட்ஷே ஆக்கி விடும் மதுர.

ப. சிங்காரம் டால்ஸ்டாய்னா ஜி. நாகராஜன் செக்காவ் தான்னு கோணங்கியின் திண்ணம்.

'மங்கம்மாள் சத்திரம் வால்க்ளாக்'ல ப. சிங்காரமும் ஜி. நாகராஜனும்.

மதுரை VTC பிரின்சிபால் ஜெகதீசன், STC பிரின்சிபால் சங்கர நாராயணன் ஆகிய இரண்டு டுட்டோரியல் காலேஜ்காரர்களோடு ஜி. நாகராஜன் சேர்ந்து போய்
ப. சிங்காரத்தை சந்திப்பதுண்டு.
Y.M.C.A யை ஒட்டியிருந்த மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட்டில் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள்.

பின்னாளில் கோணங்கியிடம் ப. சிங்காரம்
தான் 'தெற்கில் ஒரு இடம்' என்று ஒரு நாவல் எழுத இருப்பதாக கூட அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

கோணங்கி அந்த திண்டுக்கல் ரோட்டில் அவரை பார்க்க போனாலே Y. M. C. As இருந்து கிளம்பி மாடர்ன் ரெஸ்ட்ரெண்ட் தான்.

கோணங்கிக்கு டி. ஹெச். லாரன்ஸின் ரெயின் போ
ப. சிங்காரம் கொடுத்திருக்கிறார். இது போல முருகேச பாண்டியனுக்கும் ஒரு புத்தகம் கொடுத்தாராம்.

ப. சிங்காரத்தின் மரணத்திற்கு  பிறகு அவருடைய சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு
ஒரு கல்யாணத்திற்கு கோணங்கி போயிருந்த போது
ப. சிங்காரம் ''டேய் என்னடா, இங்க வந்துட்ட " என்று கேட்டுக் கொண்டே  தெருவில் நடந்து போனாராம்.

(தொடரும்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.