Share

Feb 12, 2009

நாகேஷும் பாலச்சந்தரும்


நாகேஷிற்கு நெஞ்சில் ஓர் ஆலயத்தில் வாழ்க்கை கொடுத்தவர் ஸ்ரீதர்.அதன் பிறகு தான் நாகேஷை சினிமாவுக்கு தெரியும் .'நெஞ்சம் மறப்பதில்லை ' படத்தில் நாகேஷின் நுட்பமான நேர்த்தியான நகைச்சுவை வார்த்தையால் விவரிக்கமுடியாது.

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் முக்கிய கதாபாத்திரம் ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பா ரோல் ஸ்ரீதர் கொடுத்தது தான் .'ஊட்டி வரை உறவு ' நாகேஷின் ஆர்ப்பாட்டமான நகைச்சுவை காட்சிகள் பார்க்க பார்க்க பார்க்க திகட்டவே திகட்டாதது .

பட்டணத்தில் பூதம் இயக்கியவர் ராமன் . நாகேஷ் சாதனை படங்களில் முக்கியமானது . ' நாய்க்கு சீசர்ன்னு பேர் வச்சேன் .செத்துப்போச்சி ' ரமாபிரபா சோகமாக சொல்லும்போது
நாகேஷ்" பேர் வச்சே . சோறு வச்சியா " ( இந்த ஜோக்கை இப்போது விவேக் ஒரு படத்தில் அப்படியே சுட்டு விட்டது தெரியுமா )
நாகேஷிற்கு பிரமாதமான பேர் வாங்கி தந்த திருவிளையாடல் தருமி , தில்லானா மோகனாம்பாள் வைத்தி இரண்டு படங்களின் இயக்குனர் ஏ பி நாகராஜன்.
மோட்டார் சுந்தரம்பிள்ளை , எங்க வீட்டு பிள்ளை , அன்பே வா இப்படி நாகேஷ் விலா நோக சிரிக்க வைத்த படங்கள் ஏராளம் .கே எஸ் ஜி யின்'சின்னஞ்சிறு உலகம் 'சோக நாகேஷ் , 'பணமா பாசமா' அலேக் நாகேஷ் !
சாதாரண டப்பா படம் 'அண்ணாவின் ஆசை 'யில் நாகேஷ் அளப்பரையை பார்க்கவேண்டும் .
நாகேஷ் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்த காலத்தில் பாலச்சந்தரின் ராகினி கிரியேசன்ஸ் நாடகங்களில் நடித்தார் .'தெய்வத்தாய் 'என்ற எம்ஜியார் பார்முலா படத்திற்கு வசனம் எழுதிய பாலச்சந்தருக்கு இதனால் நீர்க்குமிழி மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கலாம் .
ஏதோ பாலச்சந்தர் தான் நாகேஷை உருவாக்கியவர் . அவர் தான் நாகேஷை சரியாக வேலை வாங்கியவர் என்பது போல ஒரு பிரமை கமல் உட்பட பலருக்கு இருக்கிறது . நாகேஷை ஓவர் ஆக்சனில் சிக்க வைத்ததே பாலச்சந்தர் நாடகபாணி இயக்கம் தான் .

சர்வர் சுந்தரம் கதை வசனம் பாலச்சந்தர் . இயக்குனர் அவர் அல்ல . நீர்க்குமிழி , எதிர் நீச்சல் படங்கள் நாகேஷுக்கு சொல்லும்படியான படங்கள் என்றால் நவக்கிரகம் , பத்தாம் பசலி போன்ற வீணாப்போன நாகேஷ் படங்களுக்கும் பாலச்சந்தர் தான் இயக்குனர் .வேதாந்தம் ராகவய்யா இயக்கிய நாகேஷின் இருநூறாவது படம் 'உலகம் இவ்வளவு தான் 'கூட வெற்றிபெற்றது.
'நாணல் ' பாமா விஜயம் ', 'அனுபவி ராஜா அனுபவி ' படங்களில் அட்டகாசமான நகைச்சுவை தர்பார் செய்யவைத்து அதே நேரத்தில் குணசித்ரம் , தத்துவம், புளுத்தி என்று நாகேஷை ட்ராக் மாற்றி அருமையான அபூர்வமான நகைச்சுவையை நசிக்கவைத்து குட்டி சுவர் ஆக்கியதில் பாலச்சந்தருக்கு பிரதான இடம் உண்டு . அப்புறம் அம்போ என்று கைவிட்டவரும் இவர் தான் . அவள் ஒரு தொடர்கதையில் கமல் செய்த ' விகடகவி ' ரோல் கூட நாகேஷுக்கு பொருத்தமான ரோல் தானே !
'புன்னகை ' படத்திற்கு பின் நாகேஷை பாலச்சந்தர் கைவிடுகிறார் . அபூர்வ ராகங்களில் தான் மீண்டும் நாகேஷிற்கு வாய்ப்பு . பின் மீண்டும் நாகேஷை பலபடங்களில் பாலச்சந்தர் கண்டு கொள்ளவே இல்லை .'தில்லுமுல்லு 'படத்தில் நாகேஷுக்கு பிட் ரோல் . டைட்டில்-தேங்காய் சீனிவாசன் பெயருக்கு கீழே நாகேஷ் பெயர் வரும்.

............................................
 

Feb 11, 2009

போடுங்கம்மா ஓட்டு


திமுக கவுன்சலர் தேர்தலில் அதற்கான வயது வரும் முன் சின்னப்பையனாய் இருக்கும்போதே வேட்பாளாராக என் மாமனார் எஸ்எம்டி சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்தலில் அப்போது நின்றார்.நாற்பத்தைந்து வருடம் முன்.



பெண்கள் பொது கக்கூஸ் சுவரில் ' உங்கள் வோட்டு எஸ் எம் டி சந்திரனுக்கே ' என்று இவருடைய நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். அப்போது என் மாமனார் சந்திரனின் நண்பர் ஒருவர் ' இருங்கடா ' என்று கக்கூஸ் உள்ளே நுழைந்து விட்டார்.
' டே எவளாவது உள்ளே இருக்கப்போராடா ' என்று ஒரு ஆள் பதறியிருக்கிறார்.' டே நாத்தம் , அசிங்கம் சகிக்க முடியாதேடா ' என்று இன்னொரு ஆள் கூப்பாடு.' அய்யோயோ வெளியே வாடா டே '

உள்ளே அந்த நண்பர் மூக்கை பிடித்துக்கொண்டு உள்சுவரில் ' உங்கள் வோட்டு எஸ் எம் டி சந்திரனுக்கே ' என்று பொறுமையாக எழுதிஉதய சூரியன் படத்தையும் வரைந்து விட்டு பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வந்து சொன்னாராம்." டே வெளி சுவத்திலே எழுதிபோட்டு புரயோஜனம் ஏதும் இல்லேடா. அவசரமா அடக்க முடியாம வெளிக்கி இருக்க வர்றவ இதை பார்க்கவே மாட்டா . உள்ள போய் வெளிக்கு முக்கி பீ பேண்ட பிறகு உள் சுவரில் நான் எழுதிபோட்டதை அப்புறம் மெதுவா முழுசா வாசிப்பா .சுகமா வாசிப்பா .அவ மனசிலே அப்போ தான் நல்லா பதியும். சந்திரனுக்கு வோட்டு போடுவாடா"




என் மாமனார் ஜெயித்தார்.


பெண்கள் கக்கூசிற்குள் எழுதிபோட்டு விட்டு இப்படி படு ப்ராக்டிகலா பேசியவர் யார் தெரியுமா? 
 அதன் பிறகு ஏழு வருடம் கழிந்து இவர் தான் கர்ம வீரர் காமராஜரை விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் தோற்கடித்தவர்.

ஆம். சமீபத்தில் மறைந்த பெ. சீனிவாசன்.