Share

Apr 6, 2012

பி.ஆர்.பந்துலு

பி.ஆர்.பந்துலு தமிழகத்தின் சிசில் பி டிமிலி என்று  அறியப்பட்ட இயக்குனர்.வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் படங்களின் இயக்குனர்.  சிவாஜிக்கும் இவருக்குமான நட்பு வித்தியாசமானது .
அந்த நெருக்கம் காரணமாக கொஞ்சம் ஓவராகவே சிவாஜியிடம் நடந்து கொள்வார்.

பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,பலே பாண்டியா படங்களுக்கு பிறகு-
ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்,சுற்றிலும் சில கைத்தடிகள் நிற்க,சிகரட்டை பற்றவைக்கும்போது பந்துலு காரில் வந்து இறங்குகிறார். சிவாஜி பார்க்கிறார். பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்கிறார் " டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.''

சிவாஜி எப்போதும் எல்லோரையும் ஏகாரத்தில் தான் குறிப்பிடுவார்.அதோடு ஜாதியை குறிப்பிட்டே பேசுவார். பாப்பாரப்பய , யோவ் செட்டி , ரெட்டி எங்கேடா, வாய்யா நாயுடு , டேய் கவுண்டபயலே ,கூப்புடறா முதலியார,
டே துளுக்கப்பயலே - இப்படித்தான்,இது தான் சிவாஜி.

(கிட்டத்தட்ட  இதே காலக்கட்டத்தில் சிவாஜி ஒரு மூன்று பிராமணர்களுடன் உற்சாகபானம் - ஸ்காட்ச் விஸ்கி - அருந்திக்கொண்டிருந்திருக்கிறார் . விஸ்கி கூட  ஒரு பிராமணர் உபயம் தான். சிவாஜி அவ்வப்போது " டே பாப்பான் நீ என்ன சொல்றே... " பாப்பாரப்பயல்களா " இப்படி வார்த்தைகளை பிரயோகம் செய்துகொண்டே இருந்திருக்கிறார். சுயமரியாதையுள்ள ஒரு பிராமணர் 
( விஸ்கி உபயம் செய்தவர் தான் ) எழுந்து இந்த அநாகரீகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுகிறார்.அதன் பிறகு சிவாஜியை அந்த உத்தமப்பிராமணர் சந்திக்கவேயில்லை. பலவருடங்களுக்குப் பின் யதேச்சையாய் இருவரும் சந்திக்க நேர்ந்தபோது சிவாஜிக்கு அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அல்லது அடையாளம் தெரிந்ததாக  காட்டிக்கொள்ள விருப்பமில்லை.)

பக்கத்தில் பந்துலு வருகிறார்.
' யோவ்! என்ன அத்திப்பூத்தாப்பலே.... காத்து இந்தப்பக்கம் அடிக்குதா... '

பந்துலு ' பவ்யம் பாவ்லா ' எதுவும் செய்ய மாட்டார். மரக்கிளை ஒன்றில் பார்வை நிலைத்துள்ள நிலையில் சிரித்துக்கொண்டே உட்கார்வார்.
பந்துலு மெதுவாக வேறுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்வார் ''புதுசா ஒரு படம் பண்ணப்போறேன் . ''
சிவாஜி " என்ன கதை "
பந்துலு " மகாபாரதத்திலே இருந்து ''
சிவாஜி '' படத்து பேர் என்னவோ "
பந்துலு " கர்ணன் "
சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம்  இடைவெளி  விட்டு " யாரு ஹீரோ ?"
பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக " சிவாஜி கணேசன் யா "
சிவாஜி கண்ணை விரித்து , மூக்கை விடைத்து , குரலை செருமி விட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போதே பந்துலு எழுந்து விடுவார் ." நாளைக்கு பூஜை ."
சிவாஜியைப் பார்க்காமலே அவருடைய மேக் அப் மேன் , உதவியாளர், கார் டிரைவர் ஆகியோரிடம் பேசி ( நாளைக்கி எந்த ஸ்டுடியோவில் பூஜை, மேக் அப் எப்படி ...இப்படி ...இப்படி ...) விட்டு பந்துலு  காரில் ஏறி கார் கிளம்பிப்போவதை வைத்த கண் வாங்காமல் சிவாஜி பார்த்துக்கொண்டிருப்பார். எரிமலையாய் வெடிப்பார் " டேய், பாப்பான் என்னடா நினைச்சுக்கிட்டிருக்கான். வந்தான், நாளைக்கு பூஜைங்கிறான்.நான் தான் ஹீரோங்கிறான். யாரிட்டயாவது சொல்லியிருக்கானா . சண்முகத்தை கூப்பிடுறா ." தம்பி சண்முகம் வந்து தன்னிடமும் பந்துலு இது பற்றி முன்னதாக பேசவேயில்லை என்கிற விஷயத்தை சொல்வார் . சிவாஜி கடுமையான கோபத்துடன்  Abusive  languageல் கண்டபடி திட்டுவார்."பாப்பான் என்னை ரொம்ப ஆழம் பாக்கராண்டா.இவனுக்கு ரொம்ப துளுர் விட்டுப்போச்சி "

ஸ்டுடியோ பூரா செய்தி பரவும். சினிமாவுலகம் பூரா அரை மணி நேரத்தில் பேசும்.
 " அவ்வளவு தான். சிவாஜிக்கும் பந்துலுவுக்கும் முட்டிக்கிச்சி"."
இனி கடும் பகை தான்." "
"இருந்தாலும் பந்துலு ரொம்ப ஓவரா உரிமை எடுக்கறதெல்லாம் சரியில்லே .." "சிவாஜி இனி அந்த ஆளு மூஞ்சிலேயே முழிக்க மாட்டருய்யா "
.............

மறு நாள் அதிகாலை,
 சூரியன் உதிப்பதற்கு  முன்பே
 முழு மேக் அப்புடன்
 பந்துலு பட பூஜையில் சிவாஜி ஆஜர் !
 :) :) :)
:D


......

பந்துலு -சிவாஜி நட்பும் தொழில் பங்களிப்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் ' முரடன் முத்து' படத்துடன் இருவரின் காவியத்தொடர்பு முற்றுபெற்றது என்றே ஆகி விட்டது. " முரடன் முத்து தான் சிவாஜியின் நூறாவது படம் " என்று பந்துலு லூஸ் டாக் செய்தார் . சிவாஜி தன்னுடைய  நூறாவது படம்  என்ற அந்தஸ்தை ஏ.பி.நாகராஜனின் " நவராத்திரி " படத்துக்கு கொடுத்தார். 
பந்துலு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் தற்செயலாக எம்ஜியாரை சந்திக்க நேர்ந்தது. எம்ஜியார் எழுந்து நின்று 
" பந்துலு சார்!"-கட்டிப்பிடித்துக்கொண்டார்! இந்த சந்திப்பு கண் காது மூக்கு வைக்கப்பட்டு வேறொரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த சிவாஜி காதுக்கு போனது.
"போதும்டா இந்த பாப்பான் சங்காத்தம்." 

எம்ஜியாருடன்"ஆயிரத்தில் ஒருவன் "  படத்தில் பந்துலுவின் தொழில் தொடர்பு துவங்கியது.தொடர்ந்து "நாடோடி " " ரகசிய போலீஸ்115 ", "தேடி வந்த மாப்பிள்ளை " ........

"மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படம் இயக்கிக்கொண்டிருந்தபோது பி.ஆர். பந்துலு மறைந்தார். மீதிப்படத்தை எம்ஜியாரே இயக்கினார் என்று விளம்பரப்படுத்தப் பட்டது- பட டைட்டில் 'இயக்கம்-பி ஆர் பந்துலு - எம்ஜிஆர் '  என்றாலும் ப.நீலகண்டன் தான் இயக்கம் சம்பந்தப்பட்ட வேலைகளைப்பார்த்துக்கொண்டார்.


4 comments:

  1. ஆக, வந்துட்டீங்க? வாங்க! வாங்க!

    ReplyDelete
  2. அந்தச் சுயமரியாதையுள்ள பிராமணர் யாருன்னு எனக்கும் தெரியுமே..!!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.