Jun 12, 2024

ராஜநாயஹம் அதி மதுர மதுர -கிளர்ந்தெழும் தாபம் விமர்சனம் - சிவகுமார் கணேசன்

சிவகுமார் கணேசன்:

அதிமதுர மதுர
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
கட்டுரைகள் 
R.P. ராஜநாயஹம் 
JAIRIGI பதிப்பக வெளியீடு 
பக்கங்கள் 67 
விலை ரூபாய் 100

நம்மில் பெரும்பாலான ஆண்களும், சில பெண்களும்  பால்யத்தில்  மறைக்கப்பட்ட உடல் உறுப்புகள் குறித்தும், காமம் குறித்தும் இடக்கர் அடக்கலின்றி வெளிப்படையாகப் பேசும் பல நபர்களைச் சந்தித்திருப்போம்.
R.P.ராஜநாயஹம், மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டத்தில், மதுரையில் தன்னைச் சுற்றி இருந்த மனிதர்களைக் குறித்து, அவர்களின் விசித்திரமான குணாதிசயங்களைக் குறித்துப் பேசுகிற கட்டுரைகளின் தொகுப்பு

அந்த மனிதர்களின் வாழ்வு,அவர்களின் அரசியல் புரிதல்கள்,எந்த விதக் குற்றவுணர்வுமின்றி அவர்கள் புரிகின்ற குற்றங்கள் என கஞ்சா, சாராயம், பெண்கள் சூழ வாழ்ந்த எளிய மனிதர்களைப் பற்றிய பதிவுகள் வாசிக்க அவ்வளவு சுவாரஸ்மாக இருக்கின்றன.

ராஜநாயஹத்தின் வழக்கமான, நகைச்சுவை மிளிரும்  தடைகளற்ற மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசிக்கையில், ஆலமரத்தானும், குருவி மண்டையனும், ஒத்தக் காதனும் ஒச்சுவும் நம் முன்னே இரத்தமும் சதையுமாக நடமாடுவதுதான் ராஜநாயஹத்தின் எழுத்தின் வெற்றி

கிளர்ந்தெழும் தாபம் 
கட்டுரைகள் 
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
R.P. ராஜநாயஹம் 
JAIRIGI பதிப்பக வெளியீடு
பக்கங்கள் 110 
விலை ரூபாய் 150

வெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் ஒருவன், நம்முடைய திரைப்படங்கள், புத்தகங்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவான்.இங்குள்ள மனிதர்கள் ஏன் இவ்வளவு காமவெறி பிடித்து அலைகிறார்கள் என்று. அதே நேரம் இங்கு இருக்கும் யாரையாவது அழைத்து அவன் காமத்தைப் பற்றிப் பேசினால், அதைவிட மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவான். ஏனென்றால் அந்த மனிதன் சொல்லுவான். காமம் மிகப்பெரிய பாவம்

இப்படி ஒருமுறை ரஜனீஷ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

காமத்தின் வழிதான் வந்தோம். ஆனாலும் இங்கு பொது வெளியில் காமத்தைப் பற்றி விரிவாகப் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.
தான் வாழ்ந்த மதுரை முதலான இடங்களில், தான் பணிபுரிந்த திரைப்படத் துறையில், தான் வாசித்த தமிழ் மற்றும் பிற மொழி இலக்கியங்களில் கிளர்ந்து எழுகின்ற காமத்தைப் பற்றி ராஜநாயஹம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

பிரமாண்டமாக எழுகிற காமத்தின் பிரவாகத்தில் சிக்கிய மனித மனமும் உடலும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றன என்பதை சுவையான நடையில் பேசுகிற புத்தகம்

இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் நீங்கள் அதிர்ச்சி அடையலாம்.அல்லது என்னைப் போல், நீங்கள் கடந்து வந்த பால்யத்தில் சந்தித்த இது போன்ற நபர்களை குறித்த நினைவுகளை யாரும் அறியாமல் ரகசியமாக மீட்டவும் செய்யலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.