May 17, 2024

Who is that Rajanayahem?

எஸ்.எம். சுந்தரம் 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் உதவி இயக்குநர். 
'நான் ஆணையிட்டால்' எம்ஜிஆர் படத்துக்கும்.
இரண்டிலுமே எடிட்டிங் அசிஸ்டெண்ட் கூட.

மதுரை அழகரடிக்காரர். இல்லத்து பிள்ளை சமூகம்.
 
'இதயக்கனி' க்கு எஸ். எம். சுந்தரம் தான் எடிட்டர். திரையுலகில் இவருக்கு அடையாளம்'எம்ஜிஆர் எடிட்டர்'.

ஸ்ரீவில்லிபுத்தூரில் எங்கள் சொந்தத்தில் சுந்தரம் திருமணம். மாமனாரின் தங்கை புஷ்பகாந்தி கணவர் ராமகிருஷ்ணனின் அக்கா கன்னியம்மா மகள் இவருக்கு மனைவி.

அவரைப் பார்த்ததே கிடையாது. என்றாலும் ரொம்ப தூரத்து சொந்தக்காரர் எம்ஜிஆர் எடிட்டர்.

ராசுக்குட்டி ஷுட்டிங் போது இந்த தகவலை பேசியதுண்டு.

ராசுக்குட்டி ரோட்டில் நடந்த ஷூட்டிங் போது 
 சலசலப்பு. காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட் ஃபீல்ட் க்ளீயர் செய்து கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த தள்ளி விட்டிருக்கிறான்.

 'நான் யார் தெரியுமா?'
'எப்படி நீ என்னை தள்ளி விடலாம்'  
காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட் மிரண்டு பயந்து விட்டான்.

அவரை சிலர் சமாதானம் செய்தார்கள்.
சம்பவத்தை, கோபப்பட்டுக் கொண்டிருந்தவரை பார்த்தேன். இருந்த வேலையில் இது கவனம் பெறவில்லை.

மற்றொரு பக்கம் சீனியர் அசிஸ்டெண்ட் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்து முட்டாள்தனமாக கத்திக்கொண்டிருந்தான். 
 " சோத்த திங்றீங்களா பீயத்திங்றீங்களா?" 

ஷுட்டிங் முடிந்து தங்கியிருந்த கோபிச்செட்டிப்பாளையம் எமரால்ட் ஹவுஸ் போன பின் ஊர்ப்பெரியவர் வந்து அந்த பந்தாக்கார
 சீனியர் அசிஸ்டெண்ட்டை எச்சரிக்கை செய்தார்."இப்படியெல்லாம் கூப்பாடு போட்டால் கலவரமாகி விடும். வார்த்தய விடக்கூடாது"

இயக்குநர் எமரால்ட் ஹவுஸில் எடிட்டிங் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.

பாக்யராஜ் சொல்லித் தான் எடிட்டிங் கவனிக்க வந்தாரா? அவரே இயக்குநர் பார்க்க வந்தாரோ? தெரியவில்லை. 
எம்ஜிஆரிடம் இருந்தவர்கள் பலரும் பாக்யராஜை நாடி வருவதுண்டு.

எம்ஜிஆர் எடிட்டர் எஸ் எம் சுந்தரம் 
கோபி எமரால்ட் ஹவுஸ் எடிட்டிங் அறையில். அவரிடம் " இங்கே ராஜநாயஹம் ஒங்க சொந்தக்காரர்னு சொல்றார்" 
எஸ்.எம். சுந்தரம் பதில் " Who is that Rajanayahem? யாருன்னு தெரியல"

நேரில் பார்த்திருந்தால் எப்படி சொந்தம்னு தெரிந்து கொண்டிருந்திப்பார். கோபியில் சந்திக்க முடியவில்லை.

எஸ்.எம். சுந்தரம் தான் காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட்டிடம் சண்டை போட்டவர் என்பது அப்புறமா தெரிந்தது. 
முந்தைய தினம் அவர் தான் என தெரிந்திருந்தால் பேச வாய்த்திருக்கும்.

அழகரடியில் சுந்தரத்தின் அப்பா சின்ன ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தார். எம்ஜிஆருடன் எஸ்.எம். சுந்தரம் இருக்கும் புகைப்படங்கள் ஓட்டலில் பார்த்ததுண்டு.

ராஜநாயஹத்தின் மாமனாரின் மம்சாபுரம் தீப்பெட்டி ஆபிஸில் 
எஸ்.எம். சுந்தரத்தின் மாமனார் முதிய வயதில் வேலை பார்த்தார். (1983- 1986) அவருக்கு பல சமயங்களில் சாப்பிட உதவி செய்திருக்கிறேன்.

1992 (மே - அக்டோபர்) ராசுக்குட்டி அனுபவம்.
எஸ்.எம். சுந்தரம் : Who is that Rajanayahem?

1995 - 1999 ஸ்ரீவில்லிபுத்தூரில் சுந்தரத்தின் மாமியார் கன்னியம்மா தள்ளாத வயதில் கூனிக்கொண்டு ராஜநாயஹம் வீட்டிற்கு வந்து கும்பிடுவார். எப்போதும் சாப்பிட்டு விட்டு  கடைக்குட்டி வாலிப மகன் கணேசனுக்கும்
( Special Child )வாங்கிக்கொண்டு போவார். நெறய்ய உதவியதுண்டு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.