Dec 20, 2017

Primordial wooing


எழுபத்தஞ்சு வருசத்துக்கு முந்திய சமாச்சாரம். தியாகராஜ பாகவதரின் சிவகவி, ரஞ்சனும்,வசுந்தராதேவி(வைஜயந்திமாலாவின் தாயார்) நடித்த மங்கம்மா சபதம் படமெல்லாம் ஓடிய நேரம்.
என் அப்பாவும் பெரியப்பாவும் சிறு பையன்கள். அப்பாவின் பெரியம்மா மகன் செம்பு குட்டி இளம் வாலிபன். செம்புகுட்டியுடன் தம்பிகள் வாய்க்காலுக்கு குளிக்க போவார்கள்.
செம்புகுட்டி பெரியப்பா ’சைட்’ அடிக்க ஒரு விசித்திர முறையை கையாள்வார்.
சிறுவர்களான என் அப்பாவையும் அப்பாவின் அண்ணனையும் “ஏலே, நீங்க எதிர்த்த படித்துறையில் குளிக்கிற அந்த ரெண்டு பெரிய பொண்ணுங்க ரெண்டு பேரையும் முங்கு நீச்சல்ல போய் தொடையில கிள்ளிட்டு முங்கு நீச்சல்லயே திரும்பி வாங்க.. போங்கல.. ஏல.. திரும்பி வரும் போது முங்கு நீச்சல்லயெ வரனும்ல.. நீங்க தாம் கிள்ளுனதுன்னு அவுளுகளுக்கு தெரியக்கூடாதுலேய்..”

என் அப்பாவும் பெரியப்பாவும் முங்கு நீச்சல்ல போய் அந்த இளம் சிட்டுகளின் தொடையில் கிள்ளி விட்டு முங்கு நீச்சல்ல திரும்பி வரும் போதே இந்த பக்கம் தூரத்தில் நீரில் இருந்து செம்புகுட்டி பெரியப்பா எழுந்து அந்த பெண்களை பெருமை பொங்க பார்ப்பாராம்.
‘ எவன்டி அது, எந்த செத்த மூதி கிள்ளுனான்னு தெரியலேயே’ன்னு பொண்டுக அந்த பக்கமும் இந்த பக்கமும் தேடும்போது,
ரொம்ப தூரத்தில் நீரில் இருந்து தலையை உயர்த்தி உதறி, பெருமையாக தங்களைப் பார்த்து சிரிக்கும் செம்புக்குட்டியை பார்த்து “ ஏட்டி, கிள்ளிட்டு அவ்வளவு தூரம் போயிட்டானே ராட்சசன் செம்புகுட்டி.. முங்கு நீச்சல்லயே எப்படி அதுக்குள்ள அவ்வளவு தூரம் போயிட்டான்!” என்று மலைப்பார்களாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.